மார்த்தாண்டம் : நெய்யாறு அணைக்கு குமரி மாவட்டத்தில் இருந்து தண்ணீர் செல்வதால் கேரள அரசுக்கு எப்படி தண்ணீருக்கு பணம் கொடுக்க முடியும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.நெய்யாறு இடதுகரை சானல் 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சானலுக்கு நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 2004ல் தண்ணீர் திறந்து விடுவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட 9 வருவாய் கிராமங்கள் பாதிக்கப்பட்டது.தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. விஜயதரணி எம்.எல்.ஏ., கேரள முதல்வரை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இது குறித்து விஜயதரணி எம்.எல்.ஏ., மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:நெய்யாறு அணைக்கு குமரி மாவட்ட மலையோர பகுதியில் இருந்து கருப்பையாறு வழியாக தண்ணீர் செல்கிறது. இந்த அணைக்கு செல்லும் தண்ணீரில் 40 சதவீதம் குமரி மாவட்டத்தில் இருந்து செல்கிறது. இதனால் தான் அன்று காமராஜர் ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் கேரள அரசு தற்பொழுது தண்ணீர் திறந்துவிட பணம் கேட்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.தண்ணீர் கேட்பதற்கு நமக்கு உரிமை இருந்தும், கேரள அரசு தண்ணீர் தர மறுக்கிறது. இது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆன்றணி ஆகியோரை சமீபத்தில் டில்லியில் சந்தித்து வலியுறுத்தினேன்.இந்நிலையில் உறுதியான முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கேரளாவில் உள்ள அனைத்து கட்சிகளும் வரிந்துகட்டி நிற்பது கண்டிக்கத்தக்கது. முல்லை பெரியாறு அணை நல்ல நிலையில் உள்ளது. நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்துவிடாத கேரள அரசு முல்லை பெரியாறு அணை பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யாது.இந்த பிரச்னை சுமூகமாக தீர்ப்பதற்கு மத்திய அரசு தலையிட வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு விஜயதரணி எம்.எல்.ஏ., கூறினார்.
"2004ஆம் ஆண்டிற்குப் பிறகு (தமிழ்நாட்டில் இருந்து 39 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக அணியை தேர்வு செய்த நிலையில்) நெய்யாறு அணையில் இருந்து சொட்டு தண்ணீர் கூட இடதுபுறக் கால்வாயில் கேரள அரசு திறந்துவிடவில்லை. விளவங்கோட்டில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துவந்த தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏனென்று கேட்கவில்லை மத்திய அரசு.
நெய்யாறு அணைக்கு நீர் வரத்து ஒருபோதும் குறையவில்லை. ஆயினும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை மறுத்தது கேரள அரசு. தண்ணீர் வரத்து சிறப்பாக இருந்தும் விளவங்கோட்டிற்கு தண்ணீர் மறுத்தது கேரள அரசு. நெய்யாறு அணையில் இருந்து உபரி நீர் பூவாற்றில் ஓடி அரபிக் கடலில் கலந்தது - வெப் துனியா"
"இந்த கேரளா அரசு தான் புதிய ஆணை கட்டி அதிலிருந்து தமிழகத்துக்கு வேண்டிய அளவு தண்ணீர் கொடுப்பதாக உறுதி அளித்து பேச்சுவர்த்தைக்கு தமிழக அரசை அழைக்கிறது."